ராமநாதபுரம்:ராமநாதபுரம் லோக்கல் சேனலில் நடந்த நேரடி நிகழ்ச்சியில் பொதுமக்களின் சரமாரி குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முடியாமல் காங்., எம்.எல்.ஏ., ஹசன் அலி திணறினார். ராமநாதபுரம் எம்.எல்.ஏ., மீது தொகுதி மக்களிடையே பல்வேறு அதிருப்திகள் நிலவுகிறது. இது ஒருபுறமிருக்க, ராமநாதபுரம் லோக்கல் சேனல் ஒன்றில் எம்.எல்.ஏ., பங்கேற்கும் நேரடி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. "தமக்கு "பப்ளிசிட்டி' கிடைக்கும்,' என்ற, ஆசையில் பங்கேற்ற ஹசன்அலிக்கு, அந்த நிகழ்ச்சியே பின்னடைவானது. போனில் தொடர்பு கொண்ட பொதுமக்கள், தங்கள் குமுறல்களை கேள்விகளாக கொட்டித்தீர்த்தனர். "வழுதூர் மின்நிலையத்தில் உள்ள பழுதை சரிசெய்யாதது,' குறித்து, ஒருவர் கேள்வி எழுப்பினார். அதை சரிசெய்ய வெளிநாட்டிலிருந்து ஆட்கள் வரவேண்டும்,'' என, எம்.எல்.ஏ., பதிலளித்தார். கேள்வி கேட்ட நபர் ஆத்திரமடைந்து , "நீங்க தான் அடிக்கடி வெளிநாடு போறீங்களே, பெரிய நிறுவனங்களுடன் நட்பு வெச்சிருக்கீங்க, அந்த செல்வாக்கை பயன்படுத்தி இந்த குறைபாட்டை சரிசெய்திருக்கலாமே?,' என கடிந்துகொண்டார். இதே போல, "ராமநாதபுரம் நகரில் உள்ள ரோடு பிரச்னை, நிறைவேற்றப்படாத பாதாள சாக்கடை திட்டம், பெரியபட்டினம் படகு விபத்தில் மருத்துவ சேவை குறைபாடு,' என, வந்த அழைப்புகள் அனைத்தும் எம்.எல்.ஏ.,வை பதம் பார்க்கத்தொடங்கின. "" இதில் சட்டசிக்கல் உள்ளது. குறை சொல்வது எளிது, அதை நிவர்த்தி செய்வது கடினம்,'' என்ற, பதிலை, பல கேள்விகளுக்கு எம்.எல்.ஏ., பயன்படுத்தினார். பொதுமக்கள் அதை ஏற்க முன்வராததால், பெரும்பாலான அழைப்புகளை நிகழ்ச்சியாளரே "கட்' செய்ய நேர்ந்தது.
செய்தி : தினமலர்
0 comments:
Post a Comment