ராமநாதபுரம் : "ராமநாதபுரம் சட்டசபை தொகுதி சிறுபான்மையினர் செல்வாக்கு பெற்றது,' என்ற தோற்றம் ஏற்படுவதை தடுக்க பா.ஜ., புது திட்டம் போட்டுள்ளது. சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., கண்டுகொள்ளாத நிலையில், தனித்து போட்டியிட வேண்டிய கட்டாயத்தில் பா.ஜ., உள்ளது. கூட்டணி, வேட்பாளர்கள், போட்டியிடும் தொகுதிகள் என எந்த சத்தமும் இல்லாமல் பா.ஜ., அமைதி காத்து வருகிறது. இதற்கிடையில் ராமநாதபுரம் சட்டசபை தொகுதியை சிறுபான்மையினர் செல்வாக்கு பெற்ற தொகுதி போல சித்தரித்து வருவதை தடுக்க பா.ஜ.,வினர் இம்முறை புது திட்டம் வகித்து வருகின்றனர். இதன் மூலம் ராமநாதபுரத்தில் பா.ஜ., போட்டியிட உறுதிசெய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் பா.ஜ.,விற்கு கணிசமான ஓட்டு கிடைக்கும் எதிர்பார்க்கப்படும் நிலையில், ராமநாதபுரம் நகர் ஓட்டுகளை வாங்கும் வியூகங்களை அக்கட்சியினர் ஆராய்ந்து வருகின்றனர். "ராமநாதபுரத்தில் பெரும்பான்மையாக உள்ள சமுதாயத்தை சார்ந்தவரை வேட்பாளராக நிறுத்தினால் நகர் ஓட்டுகளை அள்ளலாம்,' என, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தகுதியுடைய வேட்பாளரை தேர்வு செய்து கட்சியின் தலைமைக்கு அனுப்பியுள்ளனர். இது ஒருபுறமிருக்க மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள் இணைந்து, தொகுதியில் பா.ஜ.,வுக்கு ஆதரவான பகுதிகளுக்கு சென்று ரகசிய ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ராமநாதபுரத்தில் மும்முனை போட்டி இருக்கலாம் என தெரிகிறது.
0 comments:
Post a Comment