ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தை பயணிகள் வியாபாரிகள் முற்றுகையிட்டும், சிலரின் உள்நோக்கத்தால் புதிய பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் காலத்தாமதம் ஏற்படுவதாக மக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. ராமநாதபுரம் நகராட்சி சார்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி துவங்கப்பட்டது. ஆரம்பம் நல்லாத்தான் இருந்தது ஆனா பினிசிங் சற்று மந்தமாகத்துவங்கி, தற்போது தேர்தலை காரணம் காண்பித்து முற்றிலும் கிடப்பில் போட்ட கதையாக மாறிவிட்டது.
பஸ் எங்கு நிற்கிறது என்பதை அறிந்து இங்கும் அங்கும் ஓடும் நிலையால் பயணிகள் கொந்தளித்துள்ளனர். பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி முடிவடையும் நிலையில், அதிகாரிகள் பார்வையிட்டு விரைவு படுத்த சரியான நடவடிக்கை எடுக்காததாலும், மதுரை மண்டல அதிகாரிகள் பார்த்து ஓகே கொடுத்தால்தான் அடுத்தகட்ட பணிகள் துவங்கப்படும் என கூறி, ஏற்கனவே காலத்தாமதம் செய்தனர். பின் ஒருவழியாக அதிகாரிகள் ஆடி அசைந்து பணிகள் செய்ய ஒகே கொடுத்த பின், வேகமாக நடப்பது போல் தெரிந்தது. ஆனால் ஏதோ சில காரணங்களால் பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டிற்கு வராமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் இங்குள்ள வியாபாரிகளும் பயணிகளும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து வியாபாரிகள் பலமுறை புகார் தெரிவித்தும் இதோ சரிசெய்துவிடுவோம் என்றதோடு சரி, இதுவரை விடிவு காலம் பிறக்கவில்லை. தற்போது தேர்தலை காரணம் காண்பித்து, இப்போது முடியாது என முட்டுகட்டை போடும் நிலை உருவாகியதால், வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போதும் கமிஷனர், ""வரும் ஆனா வராது,'' என்ற கதைபோல் பதில் கூறி திருப்பி அனுப்பியுள்ளார். இதனால் வியாபரிகள் மற்றும் பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பல லட்சம் ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்ட பணியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் தாமதப்படுத்துவது மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதன் மீது மாவட்ட நிர்வாகம் கவனம் கொள்ள வேண்டும் .
0 comments:
Post a Comment