Saturday, 5 February 2011

சுற்றுலாதலமாக அறிவித்தும் நோ ரியாக்ஷன்


இராமநாதபுரம் மாவட்டத்தின் அமைச்சர் தங்கவேலன் தொகுதியில் உள்ளது ஏர்வாடி ஊராட்சி. இங்கு பஞ்சமில்லாத அளவில் குறைகள் நிறைந்து உள்ளன. இங்குள்ள பாதுஷா நாயகம் தர்கா மத நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.1996ல் சுற்றுலாதலமாக அறிவிக்கப்பட்ட ஏர்வாடியில் இன்று வரை சுற்றுலா துறையின் மூலம் எந்த முன்னேற்றமும் இல்லை.அடிப்படை வசதிகள் இல்லாதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட இந்த ஊராட்சியை தரம் உயர்த்தவும் எந்த நடவடிக்கையும் இல்லை .நிதிப் பற்றாக்குறையால் ஊராட்சியால் கூட தேவையான பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.இங்குள்ள மன நலகாப்பகத்தில் 2001 ஆகஸ்ட் ஆறாம் தேதி ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 28 பேர் உடல் கருகி இறந்தனர். இதையடுத்து அனுமதியின்றி செயல்பட்ட மனநல காப்பகங்கள் மூடப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனைக்கு மன நோயாளிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் பின் எந்த நடவடிக்கையும் இல்லாததால், இன்று கந்தலாடை,அழுக்குபடிந்த உடல்,வறண்ட தலைமுடி கோலத்தில் ஏராளமான மனநோயாளிகள் திரிகின்றனர். இதில் பலரோ இரவு நேரத்தில் பயங்கர சத்தத்துடன் தர்கா பகுதியில் உலா வருகின்றனர்.இவர்கள் யார்?எந்த ஊர்?இவர்களை விட்டு செல்வது யார்? என்ற அடுக்கடுக்கான கேள்விகளும் மக்கள் மனதில் எழுகின்றன. ஆனால் இதற்கான விடை புரியாத புதிராக உள்ளது.இவர்களோ பசியின் காரணமாக ஓட்டல்களில் உள்ள பலகாரங்களை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடிப்பதும், சிலர் பொதுமக்களையும், யாத்ரிகர்களையும் தாக்குவதையும் வழக்கமாக கொண்டுள்னர். சில நேரங்களில் இவர்கள் நடை பயணமாக கீழக்கரை,ராமநாதபுரம், ராமேஸ்வரம் செல்கின்றனர். இரவு நேரத்தில் நடந்த செல்லும் போது வாகனங்கள் மோதி பலியாகுவதும் தொடர்கிறது. மனிதநேயத்தை காப்பதாக கூறி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஏர்வாடி பக்கம் தலை காட்டுவதே இல்லை.இங்குள்ள மனநோயாளிகளை கண்டு கொள்வதும் இல்லை. மாவட்ட நிர்வாகமும் அவ்வப்போது ஆறுதலுக்காக மனநல காப்பகம் குறித்து அறிக்கை வெளியிட்டு நாட்களை கடத்தி வருகின்றன . ஆனால் மன நோயாளிகளை கரை சேர்க்க இதுவரை எந்த ஆயத்தப்பணிகளும் மேற் கொள்ள வில்லை என்பதுதான் நிஜம் . மற்றொரு பக்கமோ பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.வெளி மாநிலங்களில் இருந்து குடும்பமாக வந்த இவர்கள், கிழிந்த துணி ,அரைகுறை ஆடைகளுடனும் கூட்டமாக ,தர்கா பகுதியிலே தங்கி பிச்சை எடுத்து வருகின்றனர்.கல்வி கற்க வேண்டிய சிறுவர்,சிறுமிகளும் இந்த தொழிலில் ஈடுபட்டு வருவதுதான் வேதனையான விசயம். இது மட்டுமன்றி கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலை விரித்தாடுகிறது. காவிரி குடிநீர் திட்டப்பணிகள் முழுமையடையாததால், தேவையான அளவு காவிரி குடிநீர் வினியோகம் இல்லை. ராமநாதபுரம், உச்சிப்புளி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து லாரிகள்,டிராக்டர்களில் குடி நீர் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர் . குடிநீருக்காக பெரும் தொகையை செலவழிக்கின்றனர். யாத்ரீகர்களோ கடைகளில் விற்பனை செய்யப்படும் தரமில்லாத போலி குடிநீர் பாக்கெட் வாங்கி குடிக்கின்றனர். சுற்றுலா தலமாகவும்,ஆன்மீக தலமாகவும் பெருமை கொண்ட ஏர்வாடியில் சுகாதார துறையினர் தலை காட்டுவதே இல்லை. இதனால் மக்கள் மற்றும் யாத்ரீகர்கள் சுகாதாரமான உணவுகளை அறிய முடியாத நிலை உள்ளது.பல லட்சம்ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கால்நடை மருத்துவமனை கடந்த 10 ஆண்டுகளாக திறக்கப்படவில்லை.கட்டடம் தற்போது சிதிலடைந்து முற்புதர் நிறைந்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேவையான வசதிகள் இருந்தும் டாக்டர்கள் பற்றாக்குறையால் மருத்துவ உபகரணங்கள் முடக்கப்பட்டுள்ளது. உயர் சிகிச்சை பெற தனியார் மருத்துவமனை செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். ஐந்து டாக்டர்கள் பணிபுரிய வேண்டிய இங்கு ஒரே டாக்டரே பணியில் உள்ளார். நர்சுகளே நோயை கேட்டறிந்து மருந்து, மாத்திரைகளை வழங்குகின்றனர். கிழக்கு கடற்கரை சாலையையொட்டி மருத்துவமனை இருந்தும் இரவு நேர டாக்டர் இல்லாததால் விபத்து காலங்களில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. 63 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் இல்லாததால் , பயணிகள் இந்த பக்கம் தலை காட்டுவதே இல்லை.பெயரளவிலே அரசு பஸ்கள் மட்டும் வந்து செல்கிறது. சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறையால் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற முடியவில்லை.இதன் காரணமாக கொசு உற்பத்தி அதிகரித்து காய்ச்சல் பரவும் நிலை தொடர்கிறது. மீன்பிடி படகுகள் அதிகம் நிறைந்த ஏர்வாடியில் துறைமுகம் இல்லாததால் படகுகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மீனவர்களின் வாழ்க்கை தரம் அதிகரிக்கவும் உருப்படியான திட்டங்கள் இல்லை. மீனவர்களுக்காக கட்டப்பட்ட ஐஸ் பேக்டரி,லேத் பட்டறை மூடப்பட்டு கட்டடம் சிதிலடைந்து , முட்புதர்களுடன் காட்சியளிக்கிறது. ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் துருப்பிடித்த நிலையில் உள்ளது.தர்கா எதிரில் டாஸ்மாக் கடை இருப்பதால் மதுபான பிரியர்களின் தொந்தரவால் யாத்ரீகர்கள் சிரமமடைகின்றனர். இங்கு "ஓப்பன்' பார் உபயோகம் அதிகரித்துள்ளது.இதனால் இந்த வழியாக செல்லும் பெண்கள் பீதியில் உள்ளனர். வங்கி ஏ.டி.எம்.,மையம் இல்லாததால் பணம் எடுக்க கீழக்கரை , ராமநாதபுரம் செல்ல வேண்டும். இதனால் மன உளைச்சலும்,பண விரையமும் ஏற்படுகிறது.பல்வேறு வங்கியினர் ஆய்வு பணிகள் நடத்தி சென்றும் கண் துடைப்பாக உள்ளது.இப்படி பல்வேறு குறைபாடுகளுடன் ஏர்வாடி விளங்கி வருகிறது. மாவட்டத்தின் புகழ்பெற்ற ஆன்மிக தலமாக விளங்கும் ஏர்வாடி , வளர்ச்சி பாதையில் பின்னோக்கி செல்கிறது."யார் வாடி நின்றாலும் ஏர்வாடி வாருங்கள்' என அழைக்கும் ஆன்மிக மண்ணின் சொந்தக்காரர்களின் வாட்டத்தை போக்க யார் முன் வருவார்களோ என்ற ஏக்கம் இங்குள்ள மக்களிடையே உள்ளது.

0 comments:

Post a Comment

 
Free Flash TemplatesRiad In FezFree joomla templatesAgence Web MarocMusic Videos OnlineFree Website templateswww.seodesign.usFree Wordpress Themeswww.freethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesSoccer Videos OnlineFree Wordpress ThemesFree CSS Templates Dreamweaver