ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே தனியார் தோப்பில் சூதாட்ட கிளப் நடத்தி வந்த, அ.தி.மு.க., நகர் செயலாளர் ராஜேந்திரன் உட்பட 13பேரை போலீசார் கைது செய்து, மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். கீழக்கரை அருகே செங்கல்நீர் ஓடைபகுதியில் வெளிநாட்டில் வசிக்கும் காசிம் என்பவரது தோப்பு உள்ளது. இந்த தோப்பை கீழக்கரை அமர்தீன்(63) பராமரித்து வந்தார். இவரும், கீழக்கரை அ.தி.மு.க., நகர் செயலாளர் ராஜேந்திரனும் சேர்ந்து தோப்பில் சூதாட்ட கிளப் நடத்தி வந்தனர். இது, நாளடைவில் மதுபாருடன் கூடிய ஆடம்பர கிளப்பாக மாறியது. இங்கு தினமும் கீழக்கரை, ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பலர் வந்து சென்றனர். பெரியளவில் கவனிப்பு நடந்ததால் உள்ளூர் போலீசார் கண்டுகொள்ளவில்லை . இதுகுறித்து ரகசிய தகவல் ராமநாதபுரம் ஏ.எஸ்.பி., சிபி சக்ரவர்த்திக்கு கிடைத்தது. அவர் தலைமையில் நேற்று முன்தினம் இரவு, ராமநாதபுரம் பஜார் இன்ஸ்பெக்டர் குணசுந்தரம், ராமநாதன் எஸ்.ஐ., உள்ளிட்ட தனிப்படையினர் சாதாரண உடையில் சூதாட்ட கிளப்பிற்கு சென்றுள்ளனர். அங்கு பிரியாணி, சூப், மதுவை அருந்தியவாறு ஒரு கும்பல் சூதாடி கொண்டிருந்தது. இது குறித்து எஸ்.பி., அனில்குமார் கிரிக்கு ஏ.எஸ்.பி., தகவல் கொடுக்கவே, கூடுதல் போலீசார் உதவியுடன் சூதாட்ட கிளப்பை சுற்றி வளைத்து அங்கிஒந்தவர்களை பிடித்தனர். கிளப் நடத்திய அ.தி.மு.க., நகர் செயலாளர் ராஜேந்திரன், அமர்தீன், சூதாடிய லோகநாதன், பாலமுருகன், சிராஜூதீன், அழகர்சாமி, கணேசன், ஜாகீர்உசேன், விஜயன், முகம்மது மீரா சாகிப், ஜாபர்அலி, தனபாண்டி, சிவன் ஆகியோரை கைது செய்த போலீசார், தலைமறைவான சேதுவை தேடி வருகின்றனர்.அங்கிருந்த மூன்று பைக்குகள், ஒரு மாருதி வேன், 12 மொபைல் போன், மதுபான பாட்டில்கள், 60 ஆயிரத்து 725 ரொக்க பணம் , எட்டு பவுன் தங்க நகை, சீட்டுகட்டுகள், டேபிள், சேர்களை பறிமுதல் செய்தனர்.
டி.எஸ்.பி.,மீது நடவடிக்கை : சூதாட்ட கிளப்பை உள்ளூர் போலீசார் கண்டுகொள்ளாமல் இருந்ததை அறிந்த அனில்குமார் கிரி எஸ்.பி., அங்கு பொறுப்பிலிருந்த முனியப்பன் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோரை ராமநாதபுரம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்தார். இதில், இன்ஸ்பெக்டர் இளங்கோவிற்கு தொடர்பு இல்லாதது தெரியவந்ததால், அவரை திருப்புல்லாணி கொலை வழக்கு விசாரணைக்கு அனுப்பியுள்ளார்.
0 comments:
Post a Comment